இந்தியத் திரையுலகில் ‘பாடும் நிலா’ என்று அனைவராலும் அழைக்கப்பட்ட பிரபல இசையமைப்பாளர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இன்று காலமானார். அவருக்கு வயது 74.
தமிழ், தெலுங்கு, கன்னடம் என 16 மொழிகளில் 40ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரை இசைப்பாடல்களை பாடியவர். சிறந்த பின்னணி பாடகருக்காக 6முறை தேசிய திரைப்பட விருதை வென்றவர். பாடகர், டப்பிங் கலைஞர், இசை அமைப்பாளர், நடிகர் என பன்முக திறமை கொண்டவர்.1969 ஆம் ஆண்டு சாந்தி நிலையம் படத்தில் இடம்பெற்ற இயற்கை எனும் இளைய கன்னி பாடல் எஸ்பிபியின் முதல் தமிழ்பாடலாகும். இந்திய அரசின் உயரிய பத்மஸ்ரீ, பத்மபூசன் விருதுகளையும் பெற்றவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்.

எஸ்பிபிக்கு ஆகஸ்ட் 5-ம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள எம்ஜிஎம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தனக்கு லேசான கரோனா தொற்றுதான் என்று தனது அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை எஸ்பிபி வெளியிட்டார். அதற்குப் பிறகு சிகிச்சைக்கு நல்லபடியாக ஒத்துழைத்து வந்த அவருடைய உடல்நிலை ஆகஸ்ட் 14-ம் தேதி மோசமடைந்தது. எஸ்.பி.பிக்குத் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவருடைய உடல்நிலை கொஞ்சம் கொஞ்சமாக சகஜ நிலைக்கு வந்தது. வாய் வழியே சாப்பிடும் அளவுக்கு அவருடைய உடல்நிலை தேறியது. இதனிடையே திடீரென்று நேற்று (செப்டம்பர் 24) அவருடைய உடல்நிலை மீண்டும் மோசமடைந்தது. அவருக்கு ஏற்கெனவே இருந்த நுரையீரல் தொற்று திடீரென்று அதிகரிக்கவே மிகவும் மோசமான நிலைக்கு அவரது உடல்நிலை சென்றது. மேலும், மூளையிலும் ரத்தக்கசிவு ஏற்பட்டது. அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் அவருடைய உயிர் இன்று (செப்டம்பர் 25) மதியம் சுமார் 1.04 மணிக்குப் பிரிந்தது. இதனை எஸ்பிபியின் மகன் சரண் ட்விட்டரில் மறைவுச் செய்தியை உறுதி செய்தார். எஸ்பிபியின் மறைவு இந்தியத் திரையுலகினரைக் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பலரும் அவருடைய மறைவுச் செய்தி வெளியானவுடன் கண்ணீர் மல்க தங்களுடைய இரங்கலைத் தெரிவித்து வருகிறார்கள். எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மனைவியின் பெயர் சாவித்திரி. பல்லவி என்ற மகளும், எஸ்.பி.சரண் என்ற மகனும் இருக்கிறார்கள். இருவருக்குமே திருமணமாகிவிட்டது.