சென்னையில் கோவேக்ஸின் தடுப்பூசி 2-வது தவணை செலுத்த சிறப்பு ஏற்பாடு.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கோவேக்ஸின் தடுப்பூசி இரண்டாம் தவணை செலுத்திக்கொள்ள நாளை முதல் 2 நாட்களுக்கு
சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இது தொடர்பாக, சென்னை மாநகராட்சியின் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னையில் இதுநாள் வரை 17,58,187 முதல் தவணை தடுப்பூசியும், 6,04,804 இரண்டாம் தவணை தடுப்பூசியும் என மொத்தம் 23,62,991 கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் தரவுகளை ஆய்வு செய்ததில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய காலத்தை கடந்து சுமார் 89,500 நபர்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. மாநகராட்சியின் சார்பில் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த தவறிய நபர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு மண்டல அலுவலகங்களில் இருந்து தொலைபேசி வாயிலாக தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, தொலைபேசி வாயிலாக தகவல் தெரிவிக்கப்பட்டவர்களில் இதுவரை 30,480 நபர்கள் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். மேலும், தற்போதைய நிலவரப்படி சுமார் 59,000 நபர்கள் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய காலத்தை கடந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் உள்ளனர். இவர்களில் கோவேக்ஸின் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத நபர்களுக்கு ஜூன் 23-ம் தேதி (புதன்கிழமை) மற்றும் ஜூன் 24 (வியாழக்கிழமை) ஆகிய இரு நாட்களுக்கு மாநகராட்சியின் அனைத்து தடுப்பூசி மையங்களிலும் கோவேக்சின் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த 2 நாள் கரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு ஏற்பாட்டுக்காக 62,050 கோவேக்சின் தடுப்பூசிகள் அனைத்து தடுப்பூசி முகாம்களுக்கும்
பிரித்து அனுப்பி வைக்கப்படவுள்ளது. பொதுமக்கள் தடுப்பூசி முகாம்கள் குறித்த தகவல்களை http://covid19.chennaicorporation.gov.in/covid/vaccine_centers/ என்ற இணையதள இணைப்பின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம். எனவே, கோவேக்சின் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி 28 நாட்களை கடந்த நபர்கள் தங்கள் பகுதிக்குட்பட்ட மாநகராட்சியின் தடுப்பூசி மையங்களுக்கு சென்று இரண்டாம் தவணை தடுப்பூசியை செலுத்திக் கொண்டு பயனடையுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.